காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது.. அண்ணாமலைக்கு பயம்.. தமிழிசை சூளுரை!
Author: Hariharasudhan13 February 2025, 9:44 am
.அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை, திருவான்மியூரில் மத்திய அரசின் 2025ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “நான் மருத்துவ பட்ஜெட் குறித்து பேச இருக்கின்றேன். இந்த பட்ஜெட்டில் மருத்துவத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை இருப்பதே சிலருக்கு பயமாக இருக்கிறது. அவர் இருந்தாலே எங்கள் கட்சிக்குப் பலம்தான்.
இந்த அக்காவும், தம்பியும் சேர்ந்து திமுக ஆட்சியை ஒழிப்போம். நடிகர் கஞ்சா கருப்பு ட்ரீட்மெண்ட் கிடைக்காமல் போராடுகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமர் மோடி மக்கள் மருந்தகங்களைத் திறந்தார். இதைவிட காப்பி அடிக்கிற ஒரு முதலமைச்சரை இந்தியாவிலேயே பார்க்க முடியாது.
ஸ்டிக்கர் ஸ்டாலின் என்பது முற்றிலுமாக நிரூபணமாகி உள்ளது. காவிதான் தமிழகத்தை ஆளப்போகிறது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். அக்காவும், தம்பி அண்ணாமலையும் சேர்ந்து ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம். இது அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ், பெரியார் வளர்த்த தமிழ் அல்ல, பெரியாழ்வார் வளர்த்த தமிழ்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய இளையராஜா.. பவதாரிணி பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு!
மேலும், மேடையில் பேசிய அண்ணாமலை, “பாஜக தலைவராக என்னால் தொடர முடியாது என்பது எனக்குத் தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026ஆம் ஆண்டில் சிறைக்குச் செல்வதைப் பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” எனக் கூறினார்.