சடலத்துடன் 110 கிமீ பயணம்.. எரிந்த நிலையில் மனைவி.. கணவன் திடுக் சம்பவம்!
Author: Hariharasudhan13 February 2025, 5:56 pm
தென்காசி, இலஞ்சி அருகே இளம்பெண் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர் மற்றும் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், இலத்தூர் அடுத்த இனாவிலக்கு பகுதியில் உள்ள மதுநாதபேரி குளம் அருகே, நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அந்தப் பெண்ணின் காலில் மெட்டி இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல், அப்பெண்ணின் இடது கை மற்றும் காலில் உள்ள ஐந்து விரல்களும் எரியாமலே இருந்துள்ளது.
மேலும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஏராளமான மது பாட்டில்களும் இருந்துள்ளன. இதனையடுத்து, சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கொலையாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி மீனாட்சி சுந்தரம் மேற்பார்வையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதன் பேரில், தனிப்படை போலீசார், இலத்தூர் முதல் இனாவிலக்கு வரையிலான சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில், அதற்கு முந்தைய நாள் இரவு 9.30 மணியளவில், அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக கார் ஒன்று சென்றது தெரிய வந்துள்ளது. இதனை, அந்த கார் பதிவு எண் மூலம் நடத்திய விசாரணையில், அந்தக் கார் விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிவகாசி, பாரதி நகரைச் சேர்ந்த ஜான்கில்பர்ட் என்பவரை போலீசார் பிடித்துள்ளனர்.
பின்பு, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியைக் கொன்று எரித்தது தெரிய வந்துள்ளது. இதன்படி, இவர் அதே பகுதியைச் சேர்ந்த கமலி (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்போது, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலியை கரம்பிடித்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதையும் படிங்க: ஸ்கேன் சென்டரில் ஊசி.. பிரிந்த சிறுவனின் உயிர்.. பெற்றோர் குற்றச்சாட்டும், நெல்லை அரசு மருத்துவமனையின் விளக்கமும்!
இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே சமீபகாலமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.அந்த வகையில், கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி கணவன், மனைவி இடையே நடந்த தகராறில், ஜான்கில்பர்ட் தனது மனைவியை கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், உடலை அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ஒருவரின் உதவியை நாடி உள்ளார்.
அதன்படி, மனைவியின் உடலை ஒரு காரில் ஏற்றி அங்கிருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம் வழியாக தென்காசி அருகே சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் காரில் கொண்டு வந்து, இலத்தூர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத குளத்தின் ஒரு பகுதியில் முட்புதருக்குள் வீசி எரித்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜான்கில்பர்ட்டை கைது செய்த போலீசார், இதற்கு உடந்தையாக இருந்ததாக சகோதரரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.