வாய்தா வாங்கும் சீமான்.. விஜயலட்சுமி அளித்த ஆதாரங்கள்.. விரைவில் கைது?
Author: Hariharasudhan27 February 2025, 1:10 pm
விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் சீமான் ஆஜராகததால் அவரைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரை 2012ஆம் ஆண்டு விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டார்.
ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதன்படி, வளசரவாக்கம் போலீசார், இந்த வழக்கில் மீண்டும் விசாரணையைத் தொடங்கினர். இதன் அடிப்படையில், நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு, வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
சுமார் 7 மணி நேரம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த விசாரணையில், இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பழிக்குப் பழி.. தலைநகரத்தில் நடந்த கொடூர சம்பவம்! அச்சத்தில் மக்கள்!
ஆனால், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். அப்போது, சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சீமான் இன்று ஆஜராகாததால், அவரை விரைவில் கைது செய்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.