நான்தான் சம்மனைக் கிழிக்கச் சொன்னேன்.. சீமான் மனைவி ஆவேசப் பேட்டி!
Author: Hariharasudhan28 February 2025, 11:41 am
போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன், முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி, “நேற்று போலீசார் வருவதாகக் கூறியிருந்தார்கள். போலீசார் வந்தால் சம்மனைக் கையெழுத்திட்டு வாங்கலாம் என்றிருந்தேன். ஆனால், என்னிடம் பேசாமல் சம்மனை எப்படி ஒட்டிச் செல்லலாம்?
வெளியே வந்து அதனைப் படிக்க எனக்கு சங்கட்டமாக இருந்ததால், போலீசார் ஒட்டிச் சென்ற சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னைக் கைது செய்யட்டும். வீட்டுப் பாதுகாவலர் அமல்ராஜ் மீது எந்த தவறும் இல்லை, போலீசார் திட்டமிட்டே அவரைக் கைது செய்துள்ளனர்.
அந்தம்மா (நடிகை) எத்தனை நாளா பேசிக்கிட்டு இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம், பாலியல் குற்றம்னு போடுறீங்க. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு நீங்கள் என்ன மரியாதை கொடுக்கிறீங்க? பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது.
அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? நடிகை வழக்கில் ஏற்கனவே மூன்றரை மணிநேரம் விசாரணைக்கு ஒத்துழைத்தார் சீமான். எங்களை மன ரீதியாக துன்புறுத்த போலீசார் திட்டமிட்டு இதனைச் செய்துள்ளது. எங்களை அசிங்கப்படுத்துகிறீர்களா?, அவர் மக்களுக்கான நேர்மையான தலைவர்.
இதையும் படிங்க: எனக்காக நீங்கள் அடிக்கும்.. கனவுக்கன்னி கயாடு வீடியோ பகிர்வு!
நேர்மையான தலைவர் என்னுடைய கணவர் சீமான், சிறையைக் கண்டு எங்களுக்கு பயமில்லை. என் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படிச் சந்திப்பார்” எனக் கூறினார். மேலும், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் மீதான விசாரணைக்கு சீமான் நேற்று ஆஜராகாததால், அவரது வீட்டு முன்பு போலீசார் நேற்று மீண்டும் சம்மனை ஒட்டினர்.
அப்போது, அதை அவரது வீட்டு பாதுகாவலர் கிழித்ததால், அவரைக் கைது செய்ய வந்த காவலருக்கும், பாதுகாவலருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, சம்மனை இங்கே ஒட்டிச் செல்லவும் என இன்று சீமான் வீட்டில் பெயர்ப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை 6 மணிக்கு சீமான் நேரில் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.