EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

Author: Hariharasudhan
3 March 2025, 3:28 pm

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர்: தஞ்சாவூர் மாவட்டம், கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடாலி கிராமத்திற்கு வசூலுக்காகச் சென்றுள்ளார்.

அங்கு மகேஷ் என்பவர், தான் வாங்கியிருந்த காருக்கு 4 மாத தவணைத் தொகையாக 52 ஆயிரம் ரூபாய் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. எனவே, அவரிடம் பணத்தை வசூல் செய்வதற்காகவே சிவா சென்றுள்ளார். அதன்பின், அன்று இரவு சிவா வீடு திரும்பவில்லை.

அதேபோல், எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், உறவினர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்த போலீசாருக்கு, கோடாலி கிராமத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Ariyalur news

இதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த சடலத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆனால் சடலம் முழுவதுமாக எரிந்திருந்த நிலையில், கை, கால் உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் தீக்கிரையாகாமல் இருந்துள்ளது. எனவே, இறந்தது யார்? என அடையாளம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதில், அந்த மோதிரம் பைனான்ஸ் ஊழியர் சிவாவினுடையது எனத் தெரிய வந்துள்ளது. பின்னர், அவர் தவணைத் தொகையை வசூலிக்கு வந்ததும், மகேஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. எனவே, சந்தேகத்தின் பேரில் மகேஷைப் பிடித்து விசாரித்துள்ளனர். இதன்படி, சம்பவத்தன்று பைனான்ஸ் ஊழியர் சிவா, மகேஷ் வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவி விமலா இருந்துள்ளார்.

அப்போது சிவா மிகவும் இழிவாகப் பேசியதாகத் தெரிகிறது. அதற்கு, ஏன் இப்படி பேசுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, நீ ஒழுங்கா பணம் கட்டினால் நான் ஏன் இப்படி பேசப் போறேன் என சிவா முரண்டு பிடித்ததாகவும் விசாரணையில் மகேஷ் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகேஷ், அருகில் இருந்த பைப் ஒன்றை எடுத்து சிவாவைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிவா, பேச்சு மூச்சின்றி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ், சிவாவின் உடலை மறைத்து வைத்து, இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், பைக்கில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

பின்னர், ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு இடத்தில் பனை மட்டைகளை வைத்து உடலை எரித்துள்ளார். மேலும், சிவா ஓட்டி வந்த பைக்கை மீன்சுருட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு எந்த ஒரு ஆவணமும் இன்றி விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முதல் கட்டமாக மகேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையில் மகேஷின் உறவினர்கள் சிலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அவர்களையும் பிடிக்க தா.பழூர் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!
  • Leave a Reply