திமுக எம்எல்ஏ சொன்னதுலாம் வேணாம்.. திமுககாரங்க சொல்றத கேளுங்க.. பிடிஓ அலுவலகத்தில் ரகளை!
Author: Hariharasudhan7 March 2025, 1:00 pm
கள்ளக்குறிச்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளைத் தேர்வு செய்வதில், திமுக எம்எல்ஏ மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 3,300 வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேர்வு செய்து, அதற்கான பணி ஆணைகளை வழங்கி வந்தனர்.
அந்த வகையில், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 458 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, இதற்கான பயனாளிகளை அரசு அறிவித்துள்ள விதிகளின் படி தேர்வு செய்ய வேண்டும் என உளுந்தூர்பேட்டை எம்எல்ஏவான மணிக்கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலரை (பிடிஓ) அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால், திமுக ஒன்றியச் செயலாளர்களான வசந்தவேல் மற்றும் முருகன் ஆகியோர், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே வீடுகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த பிடிஓ உமாராணி, எம்எல்ஏ சொன்னபடியே கடந்த மார்ச் 4அம் தேதி ஊராட்சித் தலைவர்களை அழைத்து பயனாளிகளைத் தேர்வு செய்ய வலியுறுத்தியிருக்கிறார்.

இதனை அறிந்த முருகன் மற்றும் வசந்தவேல் ஆதரவாளர்கள், திமுக கொடிகளோடு வந்து பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு, நாற்காலிகளை தூக்கி வீசி ரகளை செய்துள்ளனர். இதனால், தன்னை வேறு எங்காவது பணிமாற்றம் செய்யும்படி பிடிஓ கோரி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: ஆணுறுப்பு அறுபட்ட நிலையில் கிடந்த நபர்.. திருநங்கையாகும் ஆசையில் மரணம்.. என்ன நடந்தது?
இந்த நிலையில், இது குறித்து திருநாவலூர் ஒன்றியச் செயலாளர் வசந்தவேல் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தில் அதிமுகவினருக்கே வீடுகளை ஒதுக்கினார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அப்படி இருக்கையில், ஊராட்சி மன்றத் தலைவர் சொல்றவருக்குத்தான் வீடுகளை ஒதுக்குவோம்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செய்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
அதேநேரம், இது தொடர்பாக எம்எல்ஏ மணிக்கண்ணன் கூறுகையில், “முதல்மைச்சரின் கனவுத் திட்டம் இது. அரசு என்ன விதிகளைச் சொல்லி உள்ளதோ, அதன்படிதான் பயனாளிகள் பட்டியலை பிடிஓ தயார் செய்துள்ளார்கள். ஆனால், அவர்களை இப்படிச் செய்யலாமா? இருப்பினும், கட்சிக்காரர்களையும் விட்டுவிடாதீர்கள் என்று சொல்லிஉள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
