யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

Author: Hariharasudhan
10 March 2025, 4:55 pm

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று காலை தொடங்கியது. அந்த வகையில், மக்களவையில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், “தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால், பிஎம்ஸ்ரீ திட்டத்தின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட 2 ஆயிரம் கோடியை வேறு மாநிலங்களுக்கு பகிரப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த செயல் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை, மாநிலத்துக்கு எதிராக பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இது பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றம் உறுதிசெய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

தற்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், “திமுக நேர்மையற்றது, தமிழக மாணவர்கள் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்றனர். மொழிப் பிரச்னை செய்வது மட்டுமே அவர்களின் வேலை. அதில்தான் அரசியல் செய்கின்றனர். அவர்கள் (திமுக) ஜனநாயகமற்றவர்கள், நாகரீகமற்றவர்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

Dharmendra Pradan

இதனையடுத்து, இதற்கு எதிர்ப்பும் வகையில் திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தர்மேந்திரா பிரதான், “தனது பேச்சு புண்படுத்தி இருந்தால் வருத்தம் அளிக்கிறது” என்றார். மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் எரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்!தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?

மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!
  • Leave a Reply