நிலம் தந்த பாஜக.. பாதுகாக்க முயற்சிக்கும் காங்கிரஸ்.. ரன்யா ராவைச் சுற்றுல் அரசியல் பின்புலம்!
Author: Hariharasudhan11 March 2025, 12:42 pm
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் மீது ஆளும் காங்கிரஸ் அமைச்சர் – பாஜகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: “கர்நாடக அமைச்சர் ஒருவர் ரன்யா ராவைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் ஊழல் புரிவதற்கும், சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் கூட்டு வைக்கவும் தயங்க மாட்டார்கள். அரசியல் செல்வாக்கில்லாமல் ஒரு பெண்ணால் இவ்வளவு பெரிய அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்க முடியாது.
எனவே, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரித்தால், காங்கிரஸ் அமைச்சர் உள்பட பலர் சிக்குவர்” என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “ரன்யா ராவ் வழக்கில் போலீஸ் விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.

குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டிய தேவை காங்கிரஸ் கட்சியினருக்கு இல்லை. கடந்த 2023ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் ரன்யா ராவுக்குச் சொந்தமான நிறுவனம் இரும்புக் கம்பிகள் தயாரிக்க, சிரா அருகே 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாஜகவினருக்கு ரன்யா ராவுடன் நேரடித் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!
முன்னதாக, கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32), கடந்த மார்ச் 3ஆம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின. தற்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வைக்கப்பட்டுள்ளது.