Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. சீமானுக்கு தைரியம் சொன்ன அண்ணாமலை.. எதற்காக தெரியுமா?
Author: Hariharasudhan12 March 2025, 11:24 am
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார்.
சென்னை: பாஜக நிர்வாகி காயத்ரி தேவி மகள் திருமண விழா, சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், காரில் புறப்பட்ட சீமானைப் பார்த்த அண்ணாமலை கைகுலுக்கி நலம் விசாரித்தார். அப்போது, சீமானின் கையைப் பிடித்த அண்ணாமலை, “விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா” எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “சீமான் அண்ணன் எனக்கு ஒரு நல்ல நண்பர். அரசியலில் ஒரு மனிதன் திராவிட கட்சிகளை எதிர்த்தால், அவருக்கு பலமுனை தாக்குதல்கள் வரும். குறிப்பாக, பெரியாரைப் பற்றி பேசினால் பலமுனையில் இருந்தும் தாக்குவார்கள்.

தனிப்பட்ட வாழ்க்கைக்கு உள்ளே செல்வார்கள். போலீசாரின் அத்துமீறல்கள் நடக்கும். ஒரு மனிதனை தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தால், அவர் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைவார். அதனால் அவரிடம் உங்கள் பாதையில் நீங்கள் போய்க்கொண்டே இருங்கள் எனச் சொன்னேன்.
எங்களுக்கும், அவருக்கும் (சீமான்) நேரெதிர் கொள்கைகள் இருந்தாலும், அவர் பிரதமர் மோடி மற்றும் பாஜக குறித்து பல இடங்களில் விமர்சனம் செய்திருந்தாலும், அடிப்படையில் தமிழக அரசியல் களத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து துணிவாக நின்று கொண்டிருக்கிறார். அதனால் அவர் துணிவாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: மாசி மாத இறுதியில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
அவர் பாதையில் அவர் போகட்டும், எங்கள் பாதையில், நாங்கள் போகிறோம். ஒரு மனிதனின் தனிப்பட்ட தாக்குதல்கள் அவரைச் சோர்வடையச் செய்யும். அந்தரங்க விஷயங்கள், காவல்துறை வீட்டுக்குள் சென்றது என அனைத்தையும் பார்த்தோம். தொடர்ச்சியாக இது நடக்கும்போது மனச்சோர்வும் ஏற்படும்.
அப்போது எதேச்சையாக இந்த கல்யாண நிகழ்வில் அவரைப் பார்க்கும்போது, தைரியமாக இருங்க, உங்கள் அரசியல் பாதையில் நீங்கள் போய்கிட்டே இருங்கள் எனச் சொன்னேன். இது அடிப்படையில் ஒரு அரசியல் நாகரீகமே. கட்சிகள், கோட்பாடுகள் வேறு வேறு இருந்தாலும்கூட அவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சீமான் பெரியார் குறித்து சில கருத்துக்கள் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். அப்போது, தமிழகத்தில் இருக்கும் பல பாஜக தலைவர்கள், சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், சீமான் மற்றும் அண்ணாமலை சந்திப்பு, அவ்வப்போது நடைபெறுவதும் வழக்கமாக உள்ளது.