சமச்சிட்டேன் சாப்ட்ருங்க.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி விபரீத முடிவு.. கொடுமையின் உச்சம்!
Author: Hariharasudhan19 March 2025, 6:09 pm
வரதட்சணை மற்றும் மன ரீதியான உளைச்சல் கொடுத்ததால் கடிதம் மற்றும் மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லக்னோ: “நான் சமைத்துவிட்டேன், சாப்பிடுங்கள் கௌரவ் என்று தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட இவர், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வந்தார். 29 வயதான அன்விதி ஷர்மா என்று அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் இந்திராபுரத்தில் தனது கணவர் கௌரவுடன் வசித்து வந்த அன்விதி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், அன்விதா ஷர்மா, நேற்று முன்தினம் (மார்ச் 17) வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், நீண்ட பக்க கடிதத்தையும் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், அந்தப் பெண் தனது குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், “கௌரவ் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை. என் வேலையை மணந்தார். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். மாமியார் மீது மட்டுமே கவனம் செலுத்தும் ஒருவரை அவர்கள் விரும்பினார்கள்.

ஆனால் என் பெற்றோரும், சகோதரரும் எனக்கு சமமாக முக்கியமானவர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் என் கணவர், மாமியார் என்னைக் கேலி செய்துள்ளனர். நான் செய்த எல்லாவற்றிலும் அவர் தவறுகளைக் கண்டுபிடித்தார். என் வங்கிக் கணக்கு முழுவதையும் என்னுடைய கணவரே நிர்வகிக்கிறார். என் மகனும் என் கணவரைப் போல ஆகிவிடக்கூடாது. அவனை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்”என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் உணவு தயார் செய்துவிட்டேன், கௌரவ் கௌஷிக், தயவுசெய்து அதைச் சாப்பிடுங்கள்” என்று தனது கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மெசேஜைப் பார்த்த அன்விதா குடும்பத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அவர் சடலமாகி கிடந்துள்ளார்.
இதையும் படிங்க: காணாமல் போன ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாக மீட்பு… கோவையை அலற விட்ட சம்பவம்!
பின்னர், இதுகுறித்து அவர்கள் காவல்நிலையத்தில் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், கௌசிக், அவரது தந்தை சுரேந்திர சர்மா மற்றும் தாய் மஞ்சு ஆகியோர் மீது BNS பிரிவுகள் 85, 80 (2), 115 (2), 352, 1961 இன் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் கௌசிக் மற்றும் அவரது தந்தை சுரேந்திர சர்மா கைதான நிலையில், தாய் மஞ்சுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.