எகிறி அடிக்கும் தங்கம் விலை… மீண்டும் ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்தை கடந்தது ; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!
Author: Babu Lakshmanan25 April 2023, 10:27 am
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.
அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.
ரூ.44 ஆயிரம், ரூ.45 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.
கடந்த மாதத்தில் பெரும்பாலும் உயர்ந்தே காணப்பட்ட தங்கத்தின் விலை, ஏப்ரல் மாதத்தின் முதல் நாளில் இருந்தே சற்று சரிந்து வந்தது. ஆனால், போகப் போக புதிய உச்சத்தை எட்டி வந்தது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.45,040க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,630க்கும் விற்பனையாகிறது. இதன்மூலம் மீண்டும் தங்கம் ரூ.45 ஆயிரத்தை கடந்தது.
அதேபோல, சென்னையில் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.