ஹீரோயின் இல்லாமலேயே படத்தை முடித்து சூப்பர் ஹிட் கொடுத்த உச்ச இயக்குனர்; ஆச்சரிய தகவல்,..
Author: Sudha6 July 2024, 12:25 pm
பட்டி தொட்டியெங்கும் ஒலித்த “கேட்டேளே அங்க அதை பார்த்தேளா இங்க”எனும் பிரபலமான பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த பத்ரகாளி.தன் கண் முன்னால் ஒரு தீமை நடப்பதை பார்த்து சாதுவான ஒரு பெண் எவ்வாறு பத்திரகாளி அவதாரம் கொள்கிறாள் என்பதே இப்படத்தின் கதை.

ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ராணி சந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.எங்கிருந்தோ வந்தாள், Dr சிவா, அன்புள்ள அப்பா போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.
எழுத்தாளர் மகரிஷி எழுதிய தமிழ்ப் புதினம் பத்திரகாளியை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படம் இதே பெயரில் தெலுங்கில் 1977 இல் தயாரிக்கப்பட்டது.
பத்ரகாளி திரைப்படத்தின் கதாநாயகி ராணி சந்திரா தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கேரளத்தின் அழகுராணியாகத் தேர்வு செய்யப்பட்டவர். படத்தின் இறுதிக் கட்டத்தில், கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுப்பதற்காக தனது குழுவினருடனும் குடும்பத்தினருடனும் துபாய் சென்றார்.கலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு 1976 அக்டோபர் 11 இல் பம்பாய் வழியாக சென்னை திரும்புகையில், அவர்கள் பயணம் செய்த விமானம் தீப்பிடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு அண்மையில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
இதனால், அவர் நடிக்க இருந்த மீதிக் காட்சியை ஓரளவு அவரைப் போன்றே உருவ அமைப்புள்ள பட்டிக்காட்டு ராஜா படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து எடுத்து முடித்தார் இயக்குனர் ஏ. சி. திருலோகச்சந்தர்.