’அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறப்புக்கும் சம்பந்தமில்லை’.. கணவர் பரபரப்பு பேட்டி!
Author: Hariharasudhan24 December 2024, 11:10 am
அல்லு அர்ஜுனுக்கும், தனது மனைவியின் இறப்புக்கும் சம்பந்தமில்லை என உயிரிழந்த பெண்ணின் கணவர் பேட்டி அளித்துள்ளார்.
ஹைதராபாத்: இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய மகன் கடந்த 20 நாட்களாக கோமாவில் உள்ளான். இன்னும் எத்தனை நாட்கள் அவனுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.
என்னுடைய மகளுக்கு தற்போது வரை என்ன நடந்தது என்று தெரியாது. அவரை, கிராமத்தில் விட்டுள்ளோம். நான் வழக்கை திரும்பப் பெற தயாராக உள்ளேன். அல்லு அர்ஜுனைக் கைது செய்தது எனக்கு உடனடியாகத் தெரியாது. என் மனைவியின் இறப்புக்கும், அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
என்ன நடந்தது? அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையொட்டி, புஷ்பா 2 சிறப்புக் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ஆம் தேதி இரவு திரையிடப்பட்டது.

அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த அல்லு அர்ஜூனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்துடன் வந்த ரேவதி (35) என்பவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் ஸ்ரீதேஜா (9) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
இதையும் படிங்க: வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்லு அர்ஜூனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து, புஷ்பா 2 திரைப்படத் தயாரிப்பாளர்கள் நவீன் ஏர்நேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து, நஷ்ட ஈடாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
அப்போது தெலுங்கானா அமைச்சர் கோமாட்டி ரெட்டி வெங்கட் ரெட்டியும் உடனிருந்தார். இந்த நிலையில், புஷ்பா 2 சிறப்புக் காட்சியில் பெண் உயிரிழந்த வழக்கில், அல்லு அர்ஜூன் இன்று (டிச.24) காலை விசாரணைக்காக சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.