உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…
Author: Prasad2 April 2025, 11:20 am
அர்ஜுன் ரெட்டி நடிகை
“அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்களிடையேயும் இவர் பிரபலமடைந்தார். தமிழில் “100% காதல்”, “கொரில்லா” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த ஷாலினி பாண்டே தற்போது தனுஷ் இயக்கி வரும் “இட்லி கடை” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷாலினி பாண்டே, தனது சினிமா கெரியரில் தான் சந்தித்த மோசமான சம்பவம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
கதவை தட்டாம உள்ளே வந்துட்டாரு…
“எனது கெரியரில் நான் நல்ல மனிதர்களுடன் மட்டுமே பணியாற்றினேன் என சொல்ல முடியாது. நான் சில அச்சம் தரக்கூடிய மனிதர்களுடனும் பணியாற்றி இருக்கிறேன். நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தவள் அல்ல. நான் ஒரு வெளியாள். சினிமாவிற்கு புதியவள். எனக்கு சினிமாத்துறையை பற்றி எந்த ஐடியாவும் அப்போது இல்லை.
எனது கெரியரின் தொடக்க காலகட்டத்தில் இது நடந்தது. நான் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்த இயக்குனர் எனது கேரவானுக்குள் திடீரென நுழைந்துவிட்டார். நான் உடை மாற்றிக்கொண்டிருந்தேன். அவர் கதவை தட்டக்கூட இல்லை. நான் அப்போது ஒரே ஒரு திரைப்படத்தில்தான் நடித்திருந்தேன். மற்றவர்களிடம் இனிமையாக நடந்துகொள், அப்போதுதான் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என சிலர் என்னிடம் கூறுவது வழக்கம்.
அந்த இயக்குனர் உள்ளே நுழைந்ததும் நான் எதையுமே யோசிக்கவில்லை. வெளியே போங்கள் என கத்திவிட்டேன். அப்போது எனக்கு 22 வயதுதான். நான் கத்தியிருக்க கூடாது என சிலர் என்னிடம் கூறினார்கள். ஆனால் நடத்தை என்று ஒன்று உள்ளது. நான் சினிமாவிற்கு புதியவள் என்பதற்காக கதவை தட்டாமல் உள்ளே வருவார்களா என்ன?” என்று தான் எதிர்கொண்ட சம்பவத்தை குறித்து ஆதங்கத்தோடு அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார் ஷாலினி பாண்டே.