டைரக்டர் சொன்ன அந்த ஒரு வார்த்தை; கும்பிடுபோட்டு பாதியிலேயே கிளம்பிய வடிவேலு!
Author: Prasad24 April 2025, 12:14 pm
திமிர் பிடித்தவர்
வடிவேலு படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் திமிராக நடந்துகொள்வார் எனவும் தன்னுடன் நடிக்கும் ஜூனியர் காமெடி நடிகர்களை மரியாதை இல்லாமல் நடத்துவார் எனவும் அவர் மீது பல புகார்கள் இருக்கின்றன. இந்த நிலையில் “கேங்கர்ஸ்” திரைப்படத்திற்கான புரொமோஷன் பேட்டி ஒன்றில் பேசிய வடிவேலு தனக்கும் ஒரு பிரபல இயக்குனருக்கும் இடையே நடந்த சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
எப்பவுமே வம்பு பண்றீங்களே!
ஹரி இயக்கிய “ஐயா” திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்றை நாம் பார்த்திருப்போம். அதாவது ஒருவர் கையில் அரிவாளுடன் திரையரங்கிற்கு வருவார். திரையரங்கு உரிமையாளரான வடிவேலுவிடம், “என் பொண்டாட்டியை இன்னொருத்தன் தள்ளிட்டு வந்து படம் பாக்குறான்” என வம்பு பண்ணுவார்.
அப்போது வடிவேலு திரையரங்கிற்குள் ஓடிக்கொண்டிருந்த படத்தை அப்படியே நிப்பாட்டி ஒலிபெருக்கியில் “யாரோ ஒரு பொண்ணு அவளுடைய புருஷனுக்கு தெரியாமல் படம் பார்க்க வந்திருக்கிறாள். நான் ஒரு நிமிடம் லைட்டை ஆஃப் பண்ண சொல்றேன். அந்த கேப்ல நீ வெளில ஓடிப்போய்டு” என்று சொல்லி லைட் ஆஃப் செய்வார். பார்த்தால் இரண்டு ஜோடிகளை தவிர மற்ற அனைவரும் ஓடிப்போயிருப்பார்கள். இந்த காமெடி காட்சி மிகப் பிரபலமான காமெடி காட்சி ஆகும்.
ஆனால் இந்த காமெடி காட்சியை முதலில் இயக்குனர் வேறு மாதிரியாக எழுதி வைத்திருந்தாராம். அதாவது அரிவாளோடு வருபவர் திரையரங்கு வாசலில் நின்று அவனது பொண்டாட்டியை கத்தி கூப்பிடுவது போல் எழுதியிருந்தாராம். இதில் காமெடியே இல்லை என்று எண்ணிய வடிவேலு இயக்குனரிடம், “அரிவாளோடு வருபவன் என்னை மிரட்டுவது போல் மாற்றிக்கொள்ளலாம். யார்டா தியேட்டர் ஓனரு. என் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட வந்து படம் பாத்துட்டு இருக்கா. அவள உள்ள விட்டுட்டு நீ வெளிலவா உட்கார்ந்திருக்க என அவன் கேட்க, அதற்கு நான் உன் பொண்டாட்டி யார்னு எனக்கு எப்படியா தெரியும். இன்டர்வெல் வரப்போகுதுயா, இன்டெர்வெல்ல வெளில விடுறேன் என சொல்கிறேன்” என்று வடிவேலு அந்த காட்சியை விவரிக்க படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் வடிவேலுவின் காமெடிக்கு சிரித்து விட்டார்களாம்.
அப்போது அனைவரையும் முறைத்துப் பார்த்த இயக்குனர், “நான் சொல்றதை நீங்க ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டிக்கீங்களே” என்று கோபமாக பேசினாராம். அதற்கு வடிவேலு, “அதான் எல்லோரும் நல்லா இருக்கு என்று சிரிக்கிறார்களே. இப்படி காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே” என்று கூறினாராம்.
அதற்கு இயக்குனர், “இப்படித்தான் வரும்போதெல்லாம் நீங்க வம்பு பண்றீங்க” என்று சொன்னாராம். இது வடிவேலுவை காயப்படுத்திவிட்டதாம். “வம்பு பண்றேனா? ரைட்டு தம்பி, நீங்க படம் எடுத்துக்கோங்க, நான் வரேன்” என்று கும்பிடு போட்டு வடிவேலு வீட்டிற்கு கிளம்பிவிட்டாராம். அதன் பிறகு இயக்குனர் வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்டு திரும்ப அழைத்து வந்தாராம். இந்த செய்தி வெளியே கசிந்துவிட செய்தித்தாள்களில், “வடிவேலுவின் அட்டகாசம், வடிவேலுவின் திமிர் பேச்சு” என்று போட்டுவிட்டார்களாம். “இப்படியே கெட்ட பெயர் வாங்குவதுதான் என்னுடைய வேலை” என்று மிகவும் மனம் நொந்தபடி அப்பேட்டியில் பேசியுள்ளார் வடிவேலு.