செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?-ஆதங்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!
Author: Prasad15 April 2025, 12:28 pm
ஹாரிஸ் மாமா
90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியவர். ஏ.ஆர்.ரஹ்மானிற்குப் பிறகு அடுத்தக் கட்ட நவீன மற்றும் தரமான ஒலியுடன் கூடிய இசையை ரசிகர்களுக்கு வழங்கி தமிழ் சினிமா இசை உலகில் கோலோச்சிக்கொண்டிருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைந்துப்போனாலும் இவர் பிசியாக இருந்த காலகட்டத்தில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் காலத்தை தாண்டியும் ஒலிக்க கூடியவையாக அமைந்தன. இந்த நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது கான்செர்ட் ஒன்றில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?
ஹாரிஸ் ஜெயராஜிடம் பத்திரிக்கையாளர்கள் AI குறித்து கருத்து கேட்டனர். அதற்கு ஹாரிஸ் ஜெயராஜ், “AI நான் பயன்படுத்தியதே இல்லை. அதனால் எனக்கு அதை பற்றி தெரியாது. வருங்காலத்திலும் நான் AI-ஐ பயன்படுத்த மாட்டேன். அதற்குதான் பாடகர்கள் பலர் இருக்கிறார்களே? பாடகர்கள் யாரும் இல்லை என்றால் நாம் யோசிக்கலாம். அனைவரும் இருக்கும்போது எதற்கு?” என பதிலளித்தார்.

“AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்து போன பாடகர்களின் குரலை கொண்டு வருகிறார்கள். நீங்கள் அப்படி என்ன பாடகரை கொண்டுவர விரும்புகிறீர்கள்?” என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு, “என்னை பொறுத்தவரை உயிரோடு இருக்கும் பாடகர்கள்தான் எனக்கு பிடித்தவர்கள். எவ்வளவோ பாடகர்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லாமல் வாய்ப்பிற்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு ஏன் இறந்துப்போனவர்களை பாட வைக்கச்சொல்கிறீர்கள்? உயிரோடு இருப்பவர்களை கொண்டாடுங்கள். இறந்துப்போன பாடகர்கள் எல்லாம் ஏற்கனவே புகழ்பெற்று வாழ்ந்து முடித்தவர்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு வேண்டுமானால் வாய்ப்பு கொடுங்களேன். அவர்கள் சந்தோஷப்படுவார்களே” என்று ஹாரிஸ் ஜெயராஜ் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.