மேடையில் கண்கலங்கிய இளையராஜா.. பவதாரிணி பெயரில் சிறுமிகள் ஆர்கெஸ்ட்ரா குழு!
Author: Hariharasudhan13 February 2025, 8:56 am
பவதாரிணி நினைவாக, அவரது பெயரில் சிறுமிகள் (15 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இளையராஜா அறிவித்தார்.
சென்னை: மறைந்த பிரபல பின்னணி பாடகி பவதாரிணியின் பிறந்தநாள் மற்றும் திதியை முன்னிட்டு, சென்னை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவரது தந்தையும், இசையமைப்பாளருமான இளையராஜா, தனது மகளின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், இளையராஜா, தனது இசையில் பவதாரிணி பாடிய “காற்றில் வரும் கீதமே..” என்ற பாடலைப் பாடி நெகிழ்ந்தார். மேலும், தனது தங்கை பவதாரிணி பிறந்தபோது அவரைக் கொஞ்சிய நினைவலைகளை, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது சகோதரர் கார்த்திக் ராஜா கண் கலங்கியபடி பகிர்ந்தார்.
மேலும், கங்கை அமரன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் பவதாரிணி குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, பவதாரிணி நினைவாக, அவரது பெயரில் சிறுமிகள் (15 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்கவுள்ளதாக இளையராஜா அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், இளையராஜாவின் குடும்பத்தினர் மட்டுமல்லாது, திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பவதாரிணி கடைசியாக இசையமைத்த “புயலில் ஒரு தோணி” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் அதே மேடையில் நடைபெற்றது.
இதையும் படிங்க: சாக்லேட் பாய் மாதவனின் ரசிகைகள் கவனத்திற்கு.. கோவையில் படமாகும் ஜி.டிநாயுடு பயோபிக்!
பவதாரிணி இறப்பு: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, உடல்நலக் குறைவால் காலமானார். இலங்கையில் சிகிச்சையில் இருந்த பவதாரிணி அங்கு காலமானார். இதனால் அவரது உடல் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அந்த வகையில், நேற்று பவதாரிணியின் பிறந்தநாள் என்பதால், அவரது சித்தப்பா மகனும், அண்ணனும் ஆன வெங்கட் பிரபு, தனது எக்ஸ் பக்கத்தில் பவதாரிணி புகைப்படத்தை பகிர்ந்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.