துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?
Author: Hariharasudhan4 March 2025, 9:43 am
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
பெங்களூரு: இது தொடர்பாக கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா கனிட்கா பேசுகையில், “கர்நாடகாவில் கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அந்த விழாவில் கலந்து கொள்ள அவர் மறுத்துவிட்டார். அப்போது, ‘எனக்கு ஹைதராபாத்தில் வீடு இருக்கிறது, கர்நாடகா எங்கே இருக்கிறது என எனக்குத் தெரியாது, எனக்கு நேரமில்லை. நான் வர முடியாது’ என்று அவர் விழாவை புறக்கணித்தார்.
இதன் மூலம் நடிகை ராஷ்மிகா கன்னடத்தை புறக்கணித்துள்ளார். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு 10 – 12 முறை சென்று அழைத்தும், அவர் வர மறுத்துவிட்டார். இங்கிருந்து அவரது வாழ்க்கையை ஆரம்பித்துதான் இந்தத் துறையில் வளர்ந்திருக்கிறார். இருப்பினும், அவர் கன்னடத்தைப் புறக்கணித்தார். அவருக்கு பாடம் புகட்டக் கூடாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

ராஷ்மிகா பேசியது என்ன? காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்தப் பேச்சால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முன்னதாக, சாஹா பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராஷ்மிகா, “நான் ஹைதராபாத்தில் இருந்து வந்தவள், நான் தனியாக வந்திருக்கிறேன், இன்று நான் உங்கள் அனைவரின் குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறேன் என்று நம்புகிறேன்’ எனக் கூறினார்.
இந்தப் பேச்சு கன்னட ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. மேலும், தற்போது ‘சாஹா’ திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. விக்கி கௌஷல், அக்ஷய் கண்ணா, வினீத் சிங், திவ்யா தத்தா, அசுதோஷ் ராணா ஆகியோர் நடித்துள்ள இந்த வரலாற்றுத் திரைப்படம், 2025ஆம் ஆண்டின் இதுவரை இந்தியாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!
அடுத்ததாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கானுடன் இணைந்து ‘சிக்கந்தர்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ராஷ்மிகா மந்தனா, கர்நாடகாவின் கூர்க் பகுதியைச் சேர்ந்தவர். ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து கன்னட திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் திரைப்பட உலகில் அறிமுகமானார்.
ஆனால், கீதா கோவிந்தம், டியர் காமரேட், சாரிலேரு நீகேவரு போன்ற தெலுங்கு திரைப்படங்கள் மூலம் அவர் புகழ் பெற்ற ராஷ்மிகா, அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார். இதனால் நேஷ்னல் கிரஸ்ஸாகவும் ராஷ்மிகா வலம் வந்தார்.
