ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!
Author: Hariharasudhan10 March 2025, 9:50 am
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பெங்களூரு: தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வர மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா குற்றம் சாட்டினார்.
அது மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அழைத்தபோது, தனது வீடு ஹைதராபாத்தில் உள்ளதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது எனத் தெரியாது என்றும் ராஷ்மிகா கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கன்னட திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு காங்கிரஸ் எம்எல்ஏவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். இதன்படி, அவரை யாரும் அழைக்கவில்லை என்றும், இந்த கருத்து பொய்யானது என்றும் ராஷ்மிகா மந்தனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோருக்கு கொடவா சமூக அமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!
இந்தக் கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏவின் மிரட்டலைக் கண்டித்ததோடு, ராஷ்மிகா மந்தனாவின் தனித்துவமான பங்களிப்பு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும், அவர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு விழாவில் கலந்து கொள்வது அவருடைய சொந்த விருப்பம் என்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.