உடம்பில் ஆடையே இல்லாமல் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்! எம்ஜிஆர்தான் காரணமா?
Author: Prasad1 April 2025, 2:51 pm
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு
திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம் மாபெரும் வெற்றியடைந்துவிடும். அந்தளவிற்கு இவர்களின் கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணியாக இருந்தது. அதுமட்டுமல்லாது அந்த காலகட்டத்தில் பொது மக்கள் பலரும் நம்பியாரை நிஜ வில்லனை போலவே பார்த்து பயந்தார்கள். பொது இடத்தில் நம்பியாரை சந்திக்கும் சில ரசிகர்கள் “எங்க தலைவர் எம்ஜிஆரையே அடிக்கிறியா நீ” என திட்டிய சம்பவங்களும் உண்டு.
ஆனால் இவர்கள் திரையில்தான் வில்லன்களே தவிர நிஜ வாழ்க்கையில் மிகவும் நெருக்கமான நட்போடு வாழ்ந்தார்கள். குறிப்பாக நம்பியார் மிகவும் ஒழுக்கமான நடிகர் என்றே பெயர் பெற்றவர். அதுமட்டுமல்லாது நம்பியார் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழாடை மட்டும் அணிந்து வந்த நம்பியார்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எம்ஜிஆரின் உதவி இயக்குனரான துரைராஜ், நம்பியாரை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது ஒரு எம்ஜிஆர் திரைப்படத்தில் நம்பியார் நடித்துக்கொண்டிருந்தபோது காலை ஸ்டூடியோவில் தனது அறையில் வெறும் ஜட்டியோடு மேக்கப் போட்டுக்கொண்டிருந்தாராம்.
அப்போது அத்திரைப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர், “எம்ஜிஆர் வந்துட்டாரு, உடனே கிளம்பி வரச்சொன்னாங்க” என்று கூறினாராம். “அவ்வளவுதானே, இதோ வந்துவிட்டேன்” என்று ஜட்டியோடு இருந்த அதே கோலத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாராம் நம்பியார்.
நம்பியார் இப்படிப்பட்ட ஒரு கோலத்தில் வருவதை கண்ட எம்ஜிஆர், “என்ன இப்படி வர்ரீங்க” என்று கேட்டதற்கு நம்பியார், “அவன் என்ன சொன்னான். உடனே கிளம்பி வாங்கனு சொன்னான். அதனாலதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்று பதிலளித்தாராம்.
உடனே அந்த படத்தின் இயக்குனர் நம்பியாரிடம் வந்து, “உடனே கிளம்பி வரச்சொன்னது மிகப்பெரிய தவறுதான். மன்னித்துவிடுங்கள். நீங்கள் தயவு செய்து ஆடை அணிந்துகொண்டு வாருங்கள்” என்று மன்னிப்பு கேட்க, அதன் பின்புதான் நம்பியார் அந்த காட்சிக்கான உடையை அணிந்து வந்தாராம்.