தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?
Author: Prasad17 April 2025, 8:12 pm
கறாரான இயக்குனர்
இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் அவருடன் பணியாற்றிய பலரும் பாலா மிகவும் மென்மையானவர் என்று கூறுகின்றனர். “பரதேசி” திரைப்படத்தின் போது அத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களை பாலா கம்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோதான் இது போன்ற பேச்சுக்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பறிபோன தேசிய விருதுகள்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “பரதேசி” பட ஆர்ட் டைரக்டர் சி.எஸ்.பாலச்சந்தர் அந்த வீடியோ குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பரதேசி” திரைப்படத்திற்கு ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைப்பதாக இருந்ததாம். ஆனால் பாலா நடிகர்களை அடிப்பது மாதிரியாக வெளியான வீடியோவால் அந்த தேசிய விருதுகள் பறிபோனது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “நடிகர்களை பாலாவை போல் பார்த்துக்கொள்பவர்கள் வேறு யாரும் இல்லை. கம்பால் அடிப்பது போன்ற காட்சியை படமாக்குவதற்கு முன்னால் அந்த டம்மியான கம்பை கொண்டு அவரையே அடித்துப்பார்த்துக்கொள்வார் தனக்கு வலிக்கிறதா இல்லையா என்று. அந்தளவுக்கு கவனத்தோடு இருப்பார். ஆனால் அவர் தன்னை ஏன் கறார் தன்மை கொண்டவர் என்று வெளியே காட்டிக்கொள்கிறார் என்று தெரியவில்லை” என சி.எஸ். பாலச்சந்தர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.