போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…
Author: Prasad19 April 2025, 5:42 pm
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம்
மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த புதன்கிழமையன்று கேரளா மாநிலம் எர்ணாக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தபோது போதை தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தனது அறையில் இருந்து தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை கிளப்பியது.

சாக்கோவுக்கு பறந்த சம்மன்
இதனை தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று அவருக்கு சம்மன் பறந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை அவர் எர்ணாக்குளம் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

போலீஸார் அவர் தப்பிச் சென்றது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, “அறை வாசலில் போலீஸார் நின்றது எனக்கு தெரியாது. யாரோ என்னை தாக்குவதற்காக வருகிறார்கள் என்று நினைத்தேன்” என கூறினாராம். எனினும் விசாரணையில் ஷைன் டாம் சாக்கோ அளித்த பதில்கள் எதுவும் திருப்திகரமாக இல்லாத நிலையில் Narcotics Drugs and Psychotropic Act-ன் கீழ் 27 மற்றும் 29 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மலையாள நடிகை வின்சி, ஷைன் டாம் சாக்கோ படப்பிடிப்பின்போது தன்னிடம் போதையில் அத்துமீறியதாக மலையாள நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அவர் எர்ணாக்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாது 2015 ஆம் ஆண்டு ஷைன் டாம் சாக்கோ போதை மருந்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் அவர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
