முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்
Author: Prasad12 April 2025, 8:14 pm
சாக்லேட் பாய்
ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவரது திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டன. ஆதலால் இவரது கெரியரும் சரிந்தது. எனினும் விடாமுயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் தான் நடிக்க இருந்த முதல் திரைப்படத்தை குறித்த ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த்.

முதல் படமே ரஹ்மான் மியூசிக், ஆனா?
இயக்குனர் கதிர், ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தாராம். ஸ்ரீகாந்த் ஒப்பந்தமான முதல் படம் அது. ஸ்ரீகாந்த் வளர்ந்தது ஹைதராபாத் என்பதால் தமிழ் உச்சரிப்பு அவருக்கு சரியாக வரவில்லை. ஆதலால் அவருக்கு ஒரு வருடம் தமிழ் சொல்லிக்கொடுத்து தயார்படுத்தினாராம்.
அதன் பின் ஒரு வருடம் கழித்து ஷூட்டிங் போகலாம் என்று ஒரு நாள் அதிகாலை காட்சி ஒன்றை படம்பிடித்தாராம். ஏ.ஆர்.ரஹ்மான் அத்திரைப்படத்திற்காக இசையமைத்த பாடலுக்கு மான்டேஜ் எடுத்தாராம். அதன் பின் காலை 9 மணி அளவில் கதிர் ஸ்ரீகாந்தை அலுவலகத்திற்கு அழைத்து திருநெல்வேலி அல்வா ஒரு துண்டை எடுத்து ஸ்ரீகாந்திற்கு கொடுத்தாராம்.
ஸ்ரீகாந்த் அல்வாவை சாப்பிட்ட பிறகு, “இந்த படம் நாம பண்ண வேண்டாம். அடுத்த படத்துக்கு நான் உன்னை கூப்பிடுறேன். இந்த படத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு நீ செட் ஆகமாட்டாய்” என்று கூறிவிட்டாராம். இந்த சம்பவத்தை பகிர்ந்த ஸ்ரீகாந்த், “இனிமேல் திருநெல்வேலி அல்வாவே சாப்பிட கூடாது என்று முடிவு செய்தேன்” என்று தனக்கு நடந்த அவலமான சம்பவத்தையும் நகைச்சுவையாக கூறியது குறிப்பிடத்தக்கது.