திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!
Author: Hariharasudhan9 March 2025, 2:55 pm
சுந்தர் சி – குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல்: இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி, அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பூ தம்பதியினர் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர் இதனை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று (மார்ச் 9) காலை குடும்பத்துடன் வந்தனர்.
முன்னதாக, பழனி அடிவாரத்தில் சுந்தர்.சி மொட்டை அடித்து தனது நேர்த்திக்கடனைச் செலுத்தினார். பின்னர், தனது குடும்பத்துடன் அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரயில் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்றார். தொடர்ந்து அங்கு, விளா பூஜையில் கலந்து கொண்டு, பழனி தண்டாயுதபாணியைத் தரிசனம் செய்தார்.
இதனையடுத்து, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், தங்களது 25வது திருமணநாளையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். தொடர்ந்து, மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதி, போகர் ஜீவ சாமதி ஆகிய இடங்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
மேலும், கோயிலுக்கு வந்த பக்தரக்ளுடன் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், வின்ச் ரயில் மூலம் அடிவாரத்துக்கு வந்து, காரில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பழனி கோயில் அருகே பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க: கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!
முன்னதாக, இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜராஜா படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, நயன்தாரா, ரெஜினா, மீனா உள்ளிட்டோர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி.