என்னைய நடிக்கவிடக்கூடாதுனு சொன்னாங்க; அரசியல் காரணமா?- மனம் நொந்து போய் பேசிய வடிவேலு

Author: Prasad
19 April 2025, 3:29 pm

வடிவேலுவின் கம் பேக்

கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது திமுகவிற்கு எதிராக அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தை வடிவேலு மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டு பல முறை விமர்சனம் செய்தார். அத்தேர்தலில் திமுக படுதோல்வியடைந்த நிலையில் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. 

vadivelu shared about the sad experience of gap in acting

அதன் பின் “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்திற்கு அவர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் புகார் அளித்த நிலையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதன் பின் இரண்டு வருடங்கள் கழித்து அவர் மீதான தடை நீக்கப்பட மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். 

இந்த நிலையில் தற்போது சுந்தர் சியுடன் இணைந்து “கேங்கர்ஸ்” என்ற திரைப்படத்தில் வடிவேலு காமெடி ரோலில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி துணுக்குகள் ரசிக்க வைத்தன. இத்திரைப்படம் நிச்சயம் வடிவேலுவின் கம்பேக் திரைப்படமாக அமையும் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிக்கவிடக்கூடாதுனு சொன்னாங்க….

இத்திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் வடிவேலு நீயா நானா கோபியுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது கோபி வடிவேலுவிடம், சினிமாவிற்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு வடிவேலு, “நீங்கள் பல விஷயங்களை கவனித்திருப்பீர்கள். ஒரு வாகனம் நன்றாக போய்க்கொண்டே இருக்கும். திடீரென யூடர்ன் ஆகும். சில நேரங்களில் காலங்களும் நேரங்களும் சூழ்நிலையை திருப்பிவிட்டுவிடும். பாதையே தெரியாமல் எதாவது முட்டுச்சந்தில் போய் நிற்போமே, அப்படித்தான் இதுவும். 

vadivelu shared about the sad experience of gap in acting

அரசியலுக்கு போனேன், அங்கு தேவையில்லாத சில வம்புகள் வந்தன. அந்த வம்புக்கு சம்பந்தப்பட்டவர்கள் சினிமாவிற்குள் இருந்தார்கள். அவர்கள் ஒரு சங்கத்தில் உட்கார்ந்துகொண்டு இவனை நடிக்க விடாதே என்று சொல்வார்கள். பரவாயில்லை போடா என்று அந்த இடைவெளியில் நான் எனது ஊருக்குச் சென்று பிள்ளைக்குட்டிகளுக்கெல்லாம் கல்யாணம் செய்து வைத்தேன். இதற்கு நடுவில் கொரோனா வேறு வந்துவிட்டது. என்னையைதான் நடிக்கவிடவில்லை என்று பார்த்தால் யாரையும் நடிக்கவிடவில்லை இந்த கொரோனா. கொரோனாவில் திரையுலகம்தான் நின்றுபோய்விட்டது என்று பார்த்தால் உலக உருண்டையே நின்றுபோய்விட்டது” என்று வடிவேலு அப்பேட்டியில் மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டுள்ளார். 

  • shine tom chacko arrested by ernakulam police போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…
  • Leave a Reply