தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருபவர் வெற்றிமாறன் இவரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தான் சரண்ராஜ். இவர் நேற்று இரவு 11.30 மணியளவில் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கேகே நகர் ஆர்காடு சாலை அருகே சென்றுக்கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சரண்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து விபத்து குறித்து விசாரித்ததில் விபத்து ஏற்படுத்தியவர் சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (41) என்பதும், அவரும் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்தது.
மேலும் துரித விசாரணை மேற்கொண்டதில் பழனியப்பன் மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் இறந்த சரண்ராஜ், பழனியப்பன் இருவரும் நண்பர்கள் என்றும் விசாரணையில் கூறப்படுகிறது. இதனையடுத்து விபத்து குறித்து உண்மை அறிய சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் துணை இயக்குனர் சரண்ராஜ் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.