AI தொழில்நுட்பத்தால் உயிர் பிழைக்கும் தனுஷ்? ஹிட் படத்தின் கிளைமேக்ஸை மாற்றும் படக்குழு!
Author: Prasad1 April 2025, 12:58 pm
இனி AI யுகம்…
Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ண போவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். பல்வேறு தொழில்களில் AI மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது. இதில் சினிமாவும் விதிவிலக்கல்ல.
குறிப்பாக AI மிகவும் அதிகளவில் பயன்படப்போவது சினிமாத்துறையினருக்குத்தான் என்பது நிதர்சனம். கிராபிக்ஸ் தொழில்நுட்பம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை அமைத்தல் போன்ற சினிமாவின் பல துறைகளில் AI ஒரு முக்கிய பங்கை ஆற்ற தொடங்கியுள்ளது. இதனால் ஒரு பக்கம் பல சாதகங்கள் இருந்தாலும் இன்னொரு பக்கம் பாதகங்களும் உள்ளது தவிர்க்கமுடியாதது. AI தொழில்நுட்பத்தால் பல தொழில்களில் பலரும் வேலை இழக்கப்போகும் அபாய காலமும் விரைவில் வரும் எனவும் எச்சரிக்கைப்படுகிறது. இந்த பாதகங்களை தாண்டி இது ஒரு தொழில்நுட்ப புரட்சியாகவும் பார்க்கப்படுகிறது.
AI-ஆல் உயிர்பிழைக்கும் தனுஷ்…
சமீப காலமாக சினிமாக்களில் பல காட்சிகளை உருவாக்குதலில் AI ஒரு முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. சென்ற ஆண்டு தமிழில் வெளியான “GOAT” திரைப்படத்தில் கூட AI தொழில்நுட்பத்தால் விஜயகாந்தை நமது கண் முன் கொண்டு வந்திருந்தார்கள். அந்த வகையில் தற்போது AI தொழில்நுட்பம் ஒரு பிரபல தனுஷ் திரைப்படத்தில் புகுந்து விளையாடப்போகிறதாம்.
2013 ஆம் ஆண்டு தனுஷ், சோனம் கபூர் ஆகியோர் நடித்து பாலிவுட்டில் வெளியான “ராஞ்சனா” திரைப்படத்தை நம்மில் பலரும் மறந்திருக்கமாட்டோம். இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. முழுக்க முழுக்க ஒரு சிக்கலான காதல் கதையை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் “ராஞ்சனா” திரைப்படத்தின் தொடர்ச்சியாக “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இது “ராஞ்சனா” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். “தேரே இஷ்க் மே” திரைப்படத்தில் தனுஷ், கிரித்தி ஷெனான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தனுஷின் கதாபாத்திரம் இறந்துப்போய்விடும். தற்போது ராஞ்சனா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் “ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸையே மாற்றி மறுவெளியீடு செய்யப்போகிறார்களாம். அதாவது AI தொழில்நுட்பத்தின் மூலம் “ராஞ்சனா” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் தனுஷ் உயிர்பிழைப்பது போல் காட்சியை மாற்றி வடிவமைக்கப்போகிறார்களாம். இந்த புதிய கிளைமேக்ஸுடன் “ராஞ்சனா” திரைப்படம் மறு வெளியீடு காண உள்ளதாம். இதன் தொடர்ச்சியாக “ராஞ்சனா 2” அதாவது “தேரே இஷ்க் மே” திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடித்து வருவதால், அவர் முதல் பாகத்தில் இறப்பது போன்ற காட்சி இருப்பது லாஜிக்காக இருக்காது என்பதால் இந்த முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக தெரிய வருகிறது.