கத்திரிக்காய் சாதம்: குழந்தைகளுக்கு இத கொடுத்தா கண்டிப்பா டிபன் பாக்ஸ் காலியாகி தான் வரும்!!!

Author: Hemalatha Ramkumar
21 செப்டம்பர் 2024, 7:15 மணி
Quick Share

கத்திரிக்காய் என்றாலே சிலருக்கு பிடிக்காது. ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் கத்திரிக்காய் சாதம் செய்து கொடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த கத்திரிக்காய் சாதம் சுவையாக இருக்கும். அதுவும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் கொடுப்பதற்கு இந்த டிஷ் அருமையானதாகவும், ஈசியாகவும் இருக்கும்.

கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு முதலில் நாம் தனியாக ஒரு மசாலா அரைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுக்கவும். இது லேசாக வறுபட்டதும் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி விதைகள் மற்றும் 5 வர மிளகாய் சேர்க்கவும். மசாலா பொருட்களில் இருந்து வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை குறைத்து விட்டு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் எள் விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

தேங்காயின் ஈரப்பதம் முழுவதுமாக போனவுடன் அதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கத்திரிக்காய் சாதம் செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் 1/2 டேபிள்ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை நன்றாக வறுபட்டவுடன் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து பாதி அளவு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் ஒரு நிமிடம் வதங்கியவுடன் அதில் 6 கத்திரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசியவுடன் அவற்றை சேர்த்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் நிறம் மாறி நன்றாக ரோஸ்டான பிறகு அதில் ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து அந்த புளி தண்ணியை சேர்த்துக் கொள்ளவும்.

இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் போல கொதிக்க வைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிக அளவில் சேர்த்து விட வேண்டாம். கத்திரிக்காய் நன்றாக வெந்தவுடன் நாம் தயார் செய்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறி கொள்ளவும். கலவை தொக்கு பதத்திற்கு வந்தவுடன் அதில் 3 கப் வேக வைத்த சாதம் மற்றும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். இந்த கத்திரிக்காய் சாதத்தை வெறும் அப்பளம் மற்றும் ஊறுகாய் இருந்தாலே ஜோராக சாப்பிட்டு முடித்து விடலாம்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 104

    0

    0

    மறுமொழி இடவும்