இடியாப்பம், இட்லி, பூரி சாதம்னு எல்லாத்துக்கும் செம காம்பினேஷனா இருக்க மாதிரி வெள்ளை சிக்கன் குருமா ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
8 அக்டோபர் 2024, 10:53 காலை
Quick Share

நான்வெஜ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதுவும் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டாம். சிக்கனை எந்த மாதிரி சமைத்து கொடுத்தாலும் அதன் ருசி வேற லெவலா இருக்கும். அந்த வகையில இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது வெள்ளை சிக்கன் குருமா. இது வெள்ளை சாதத்துக்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரி, இட்லி, இடியாப்பம் என்று எல்லாத்துக்குமே செம சூப்பரான காம்பினேஷனா இருக்கும். இப்போது இந்த வெள்ளை சிக்கன் குருமா எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

வெள்ளை சிக்கன் குருமா செய்வதற்கு மிக்ஸி ஜாரில் 1/2 கப் துருவின தேங்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு, 10 மிளகு, ஒரு டீஸ்பூன் கசகசா, ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்ளு, 5 பாதாம், 5 முந்திரி, 1/2 நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றை பேஸ்ட்டாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயில் முழு மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளித்துவிட்டு 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், 2 டீஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பிறகு 2 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் 1/2 கிலோ அளவு சுத்தம் செய்த நறுக்கிய சிக்கனை சேர்த்துக் கொள்ளவும்.

5 நிமிடங்களுக்கு வதக்கிய பிறகு இந்த குருமா செய்வதற்கு தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் தனியாத்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

புளிப்பு சுவைக்கு ஒரு கிண்ணம் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும். தீயை அதிகமாக வைத்து 5 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி கொள்ளுங்கள். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் சாந்தை இதனோடு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் 2 முதல் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சிறிதளவு நரைக்கிய புதினா இலைகளை சேர்த்து குக்கரை மூடிக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: ஹெல்தி ஸ்நாக்ஸ்: ருசியான கேழ்வரகு லட்டு!!!

மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பிரஷர் இறங்கியதும் குக்கரை திறக்கவும். இப்போது பார்ப்பதற்கு குழம்பு தண்ணியாக இருப்பது போல இருக்கும். ஆனால் நேரம் ஆக ஆக இது கெட்டியாக ஆரம்பித்து விடும். இதற்கு ஒரு தாளிப்பு கொடுப்பதற்கு 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் கொட்டவும். பின்னர் 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, சிறிதளவு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை குழம்பில் கொட்டி இறக்கினால் கமகம என்று சிக்கன் வெள்ளை குருமா தயார்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 162

    0

    0