பரீட்சை நேரத்துல படிக்கும்போது தூக்கம் தூக்கமா வருதா… இந்த பிரச்சினையை ஈசியா சமாளிக்கலாம்!!!
Author: Hemalatha Ramkumar19 December 2024, 10:52 am
தூக்கம் வரவில்லையே என்று அவதிப்படுபவர்களுக்கு கூட படிக்கும் போது தூக்கம் வந்துவிடும். மாணவர்கள் பொதுவாக இந்த பிரச்சினையால் அதிக அளவில் அவதிப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக தேர்வு சமயத்தில் இந்த பிரச்சனை இன்னும் மோசமாகலாம். இது போதுமான அளவு தூக்கம் இல்லாதது, நேரத்தை ஒழுங்காக கையாளாதது மற்றும் தேவையான நேரங்களில் இடைவெளி எடுக்காதது போன்ற பல காரணங்களால் ஏற்படுகிறது. நீண்ட நேரத்திற்கு நீங்கள் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி வந்ததன் காரணமாக உங்களுடைய மனது சோர்வாகி, தூக்க கலக்கம் ஏற்பட்டு, கவனக்குறைவு உண்டாகும். கூடுதலாக பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.
கடினமான பாட புத்தகங்களை படிக்கும் பொழுது மாணவர்களின் மனது அதில் மூழ்கி விடுகிறது. இதனால் உடலில் இயற்கை விளைவாகவே சோர்வு ஏற்படுகிறது. தொடர்ந்து உட்கார்ந்த நிலையில் படிப்பதால் உடலில் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் தூக்க கலக்கம் அதிகமாகும். ஆனால் இதற்காக நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. படிக்கும் பொழுது தூக்கம் வருவதை தடுப்பதற்கு உதவும் குறிப்புகளை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்
படிக்கும் போது தூக்கம் வருவதை தவிர்ப்பதற்கு உதவும் ஒரு எளிமையான வழி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது. நீர்ச்சத்து இழப்பு உங்களுக்கு தலைவலியையும், கவனிச்சிதறலையும் ஏற்படுத்தலாம். உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து விட்டால், அறிவு திறன் செயல்பாடு மேம்பட்டு, உங்களுக்கு மன தெளிவு கிடைக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் படிக்கும் பொழுது இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிப்பது உங்களை விழிப்போடும், கவனத்தோடும் வைப்பதற்கு உதவும்.
ஒரேடியாக நீண்ட நேரத்திற்கு படிப்பதை தவிர்க்கவும்
நீண்ட நேரத்திற்கு நீங்கள் படித்துக் கொண்டே இருக்கும் பொழுது உங்களுக்கு நிச்சயமாக தூக்க கலக்கம் ஏற்படும். அதிக நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துவதால் மனசோர்வு உண்டாகி, தூக்க கலக்கம் மற்றும் நீங்கள் படிக்கும் விஷயம் உங்கள் மனதில் சரியாக பதியாமல் போகலாம். எனவே படிக்கும் பொழுது இடையிடையே 10 முதல் 15 நிமிடங்களுக்கு பிரேக் எடுப்பது அவசியம். இவ்வாறு செய்வது உங்கள் மனதிற்கு ஓய்வு கொடுத்து அதனை ரீசார்ஜ் செய்யும், மீண்டும் படிப்பில் கவனத்தை செலுத்துவதற்கும் உங்களை விழிப்போடு வைப்பதற்கும் உதவும்.
சத்தமாக படிக்கவும் மற்றும் எழுதி பார்க்கவும்
நீங்கள் சத்தமாக படித்து, படித்தவற்றை எழுதி பார்க்கும் பொழுது தூக்கம் வருவது குறையும். நீங்கள் இந்த விஷயத்தில் ஈடுபடும் பொழுது உங்களுடைய விழிப்பு திறன் அதிகரிக்கிறது. சத்தமாக படிப்பது உங்களுடைய மூளையை தூண்டுகிறது. அதே நேரத்தில் எழுதுவது உங்களுடைய ஞாபகத்தை தக்க வைப்பதற்கு உதவுகிறது. இந்த முறையை நீங்கள் பின்பற்றும் பொழுது உங்களுடைய கவனம் அதிகரித்து புரிதல் மேம்படும்.
படிப்பதற்கு படுக்கையறையை தவிர்க்கவும்
படிப்பதற்கு ஒருபோதும் படுக்கை அறையை தேர்வு செய்யாதீர்கள். அது உங்களை இன்னும் தூக்க கலக்கத்தோடு வைத்துக் கொள்ளும் சௌகரியமான அந்த சூழல் உங்களுக்கு தூக்கத்தை வரவழைக்கும். எனவே ஒரு மேசை மற்றும் நாற்காலியில் அமர்ந்து படியுங்கள். இவ்வாறு செய்வது வேலை மற்றும் ஓய்வுக்கு இடையே ஒரு தெளிவான வரம்பை அமைக்கும்.
மதிய நேரத்தில் சிறிய நேர ஓய்வு
மதிய நேரத்தில் ஒரு குட்டி தூக்கத்தை போடுவது படிக்கும்போது தூக்கம் வருவதை தடுக்கும். 15 முதல் 20 நிமிடங்கள் தூங்கினால் போதுமானது. இது உங்களுடைய மனதை புத்துணர்ச்சியாக்கி, சோர்வை குறைத்து, விழிப்பை அதிகரிக்கும். மேலும் இது உங்களுடைய மூளையை ரீசார்ஜ் செய்து கவனத்தை அதிகரித்து, உங்களை ஆற்றலோடு வைத்து, ஊக்குவிப்பை வழங்கும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.