இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா… மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த அட்வைஸ்…!
Author: kavin kumar16 February 2022, 10:14 pm
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் அல்லது அவற்றை கைவிடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இதனுடன் சேர்ந்து புதிய வகை திரிபான ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி மாநில அரசுகள் தீவிர கட்டுப்பாடுகளை விதித்தன. ஞாயிறு ஊடங்கு, இரவு நேர ஊரங்கு, கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு, திரையரங்கு மற்றும் உணவங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
அவ்வகையில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார். அதில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம் என கூறி உள்ளார். புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 21ம் தேதி முதல் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த வாரம், சராசரி தினசரி பாதிப்பு 50,476 ஆக இருந்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில்30,615 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தினசரி பாதிப்பு விகிதம் 3.63 சதவீதமாக உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா பாதிப்பு நிலவரத்தை அந்தந்த வரம்புகளுக்குள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தினசரி நோய்த்தொற்றின் பரவலை மதிப்பாய்வு செய்ய வேண்டும். பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய ஐந்து அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.