டிவி நேரலையில் பங்கேற்றவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு… பதறிப்போன தொகுப்பாளர்கள்… இறுதியில் நடந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 8:53 am

விவசாயம் தொடர்பாக நடைபெற்ற டிவி நேரலையில் பங்கேற்ற நபர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் மூலமாக அந்தந்த மாநில மொழிகளில் தொலைக்காட்சி சேனல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கேரளாவில் மலையாள மொழியில் தூர்தர்ஷன் சேனலில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று நடந்த மாலை 6.30 மணிக்கு நேரலை நிகழ்ச்சியில் கேரள விவசாய பல்கலை.,யில் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த அனி எஸ்.தாஸ் (59) என்பவரும் பங்கேற்று இருந்தார். அப்போது, விவசாயம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருக்கையில், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், பதறிப்போன தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தாஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.
டிவி நேரலையின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Zee Tamil Mirchi Senthil மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!