அரசியல் பொதுக் கூட்டத்தில் திடீர் தள்ளு முள்ளு ; 8 பேர் பலி.. 5 பேர் கவலைக்கிடம்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Author: Babu Lakshmanan29 December 2022, 9:16 am
ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, எதிர்வரும் தேர்தல் தான் எனது கடைசி தேர்தல், அதில் வெற்றி பெறாவிட்டால் அரசியலில் இருந்து விலகி விடுவதாக சொல்லி, ஆளும் அரசுக்கு எதிராக பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டுகூரில் சந்திரபாபு நாயுடு நேற்று உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சந்திரபாபு நாயுடுவை காண வேண்டும் என்ற நோக்கில், கூட்டம் முண்டியடித்துச்செல்ல முயன்றதில், சிமிண்ட் தடுப்பு உடைந்து பலரும் அங்கிருந்த பாதளச்சாக்கடை வாய்க்காலில் விழந்துள்ளனர். இதில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்த சந்திரபாபு நாயுடு, உயிரழந்தோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் குழந்தைகள் யாராவது அவர்களின் கல்விக்கும் முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.