தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பதி பக்தர்கள் அதிர்ச்சி!
Author: Hariharasudhan25 October 2024, 5:26 pm
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் பெயரில் திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி: வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி அளவிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை சாந்தோமைச் சேர்ந்த இவர், தயாரிப்பாளராகவும், உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் அவரது குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்பே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் திமுகவில் பதவி வகித்து வந்த நிலையில், கட்சியில் இருந்து உட்னடியாக நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கோவையில் தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு : விசாரணையில் திக் திக்!
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று (அக்.25) இரவு ஜாபர் சாதிக் பெயரைக் குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள், திருப்பதி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குழுக்களாக பிரிந்த போலீசார், மிரட்டலுக்கு உள்ளான ஹோட்டல்களுக்கு மோப்பநாய் உதவியுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. எனவே, இது புரளி என போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.