காங்., எம்.பி ஜோதிமணி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் திடீர் அனுமதி : ஆறுதல் கூறிய காங்கிரஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2022, 1:14 pm
நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி,3 நாளாக ஆஜரான நிலையில்,இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில்,ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடையை கிழித்ததாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து,கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ பதிவு எடுத்து,தனது ட்விட்டர் பக்கத்திலும் அதனை வெளியிட்டார்.
மேலும்,காவல்துறை இழுத்து சென்ற வீடியோவை பதிவிட்டு,எங்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறையைப் பாரீர். இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி மீதான ED விசாரணைக்கு எதிரான போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினரால் அவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.