ஆற்றில் மிதந்த சடலம்.. உயிரை மாயத்துக் கொண்ட இளைஞர் : செல்பி வீடியோவில் சிக்கிய ஆதாரம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 ஆகஸ்ட் 2024, 12:33 மணி
rummy
Quick Share

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா நகரை சேர்ந்த தடகமல்லா சோமையா மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சாய்குமார் (28), சந்தோஷ் ஆகியோர் கடையில் வியாபாரத்திற்கு உதவி செய்து வந்தனர்.

இந்நிலையில் சோமையாவின் மூத்த மகன் சாய்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் கட்டி சுமார் ₹ 2 கோடி வரை கடன் பெற்று இழந்துள்ளார்.

இதனால் கடன் கொடுத்தவர்கள் சில காலமாக அழுத்தம் கொடுத்து வந்தனர். இருப்பினும் சில மாதங்களாக வாங்கிய கடனை சாய்குமார் வீட்டில் தெரியாமல் சமாளித்து வந்துள்ளார்.

ஆனால் கடனாளிகள் சமீபத்தில் வீட்டிற்கு வந்து பணம் தருமாறு தகராறு செய்தனர். இதனால், ஆகஸ்ட் 14ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாய்குமார் வீடு திரும்பவில்லை.

பெற்றோர் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சாய்குமாரின் குடும்பத்தினர் கடந்த 17ம் தேதி நல்கொண்டா போலீசில் புகார் அளித்தார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்காக சாய்குமார் ₹ 2 கோடிக்கு மேல் கடன் வாங்கியதை நம்ப முடியவில்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர்.

பந்தயம் கட்டியதால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சாய்குமார் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக சாய்குமாரை காணவில்லை என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஹாலியா சோதனைச் சாவடியில் 14வது மைல்கல் அருகே சாய்குமாரின் செல்போன் சிக்னல்கள் இருந்த இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஆனால் நாகார்ஜுனா சாகர் இடதுபுற கால்வாயில் பைக் மற்றும் செல்போனை வைத்து கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று சந்தேகமடைந்து சடலம் எங்கே இருக்கும் என்று தெரியாமல் தேடி வந்தனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு, சூர்யாபேட்டை மாவட்டம் பென்பஹாட் மண்டலத்தில் உள்ள தோசபஹாட் அருகே நாகார்ஜுனா சாகர் இடது கால்வாயில் ஒரு இளைஞரின் உடல் மிதந்து வருவதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டதில் அது சாய்குமார் என்பது கண்டறியப்பட்டு அவரது பெற்றோருக்கு உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் சாய்குமாரின் மரணத்திற்கு ஆன்லைன் சூதாட்ட கடன்கள் காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் தெருவுக்குத் தள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அரசும், காவல்துறையும் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஆன்லைன் மூலம் சூதாட்டத்துக்கு அடிமையாகி விடுவதை இளைஞர்கள் கைவிடவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே சாய்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு செல்பி வீடியோ எடுத்துள்ளார். அதில் என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்து விட்டேன். எனக்கு வாழ வேண்டும் என ஆசையாக இருக்கிறது .

ஆனால் முடியவில்லை மிஸ் யூ என அழுது கொண்டு செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார் இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் செல்போனில் நீண்ட நேரம் பயன்படுத்தினால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்து ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கினால் இது போன்ற தற்கொலை சம்பவங்களை தடுக்க முடியும் என போலீசாரும், மனநல டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

  • ரூ.411 கோடி அரசு நிலம் அபேஸ்? அறப்போர் இயக்கம் கைகாட்டும் அமைச்சர்!
  • Views: - 327

    0

    0