நாய் குறுக்கே சென்றதால் வாகன விபத்தில் இளைஞர் பலி… வீடு தேடிச் சென்று மன்னிப்பு கேட்ட நாய் ; கண்ணீர் விட்ட குடும்பம்…!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 5:57 pm

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டிற்கு சென்று நாய் மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழச் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணிக்கரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் திப்பெஷ் (21). இவர் கடந்த 16ம் தேதி இரவு சொந்த ஊரான காசினகெரேவுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடிவந்ததை கவனித்த திப்பெஷ், நாய் மீது மோதாமல் தனது பைக்கை திருப்பியுள்ளார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, அவரது இறுதி சடங்கை அடுத்த நாளே குடும்பத்தினர் செய்து முடித்தனர். இந்த நிலையில், விபத்துக்கு காரணமான நாய், நேற்று இரவு உயிரிழந்த திப்பேஷின் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றி பார்த்தது.

பின்னர், திப்பேஷின் தாய் யசோதாம்மா முன்பு மன்னிப்பு கேட்பது போல் கால்களை மடக்கி அமர்ந்த நாய், தன் காலால் திப்பேஷ் தாயின் கையை வருடியது. இதனால் அவர் கண்கலங்கிய நிலையில், “நீ எந்த தவறும் செய்யலை. எல்லாம் விதி” என்று நாயை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார்.

நாயின் இந்த செயல் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது. மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக வந்து மன்னிப்பு கேட்டு விட்டு சென்றதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!