EVM இயந்திரத்தில் மோசடி? எதிர்க்கட்சி புகார் : ஆளுங்கட்சி எம்பியின் உறவினருக்கு நெருக்கடி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2024, 6:29 pm
evm
Quick Share

மும்பை வடமேற்கு தொகுதியில் ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்த உத்தவ் கட்சி வேட்பாளர், தபால் வாக்கு எண்ணப்பட்ட பிறகு 48 வாக்குகளில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளில் உத்தவ் கட்சி வேட்பாளர் அமோல் கிருத்திகர் 4,51,095 வாக்குகள் பெற்றார். ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் ரவீந்திர வெய்க்கர் 4,51,094 வாக்குகள் பெற்றார்

எனினும், தபால் வாக்குகளை எண்ணியபோது கிருத்திகருக்கு 1,501 வாக்குகளும் வெய்க்கருக்கு 1,550 வாக்குகளும் கிடைத்தன. முடிவில் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று உத்தவ் தாக்கரே கட்சி வேட்பாளர் கிருத்திகர் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஷிண்டே சிவசேனா கட்சி வேட்பாளர் வென்றார்.
இந்நிலையில், 48 வாக்குகளில் தோல்வி அடைந்த உத்தவ் தாக்கரே சிவசேனா வேட்பாளர் அமோல் கிருத்திகர், மோசடி நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரை எதிர்த்துப் போட்டியிட்ட அரோரா, பரத்ஷா அளித்த புகாரில் மும்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர். இது தொடர்பாக சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மங்கேஷ் பண்டில்கர், தேர்தல் பணியாளர் தினேஷ் குராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெஸ்கோ வாக்குச்சாவடியில் இருந்த EVM எந்திரத்துடன் தொடர்புகொள்ளும் வசதி சிவசேனா வேட்பாளர் ரவீந்திர வெய்க்கரின் உறவினர் மங்கேஷ் செல்போனில் இருந்தது அம்பலமாகியுள்ளது.

EVM எந்திரத்தை திறப்பதற்கான ஓ.டி.பி.யை பெறும் வசதி மங்கேஷிடம் இருந்த செல்போனில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பணியில் உள்ள ராணுவத்தினர் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு முறையில் வாக்குகளை பதிவு செய்யும் முறை உள்ளது. தொலைதூரத்தில் இருந்து கொண்டே மின்னணு முறையில் வாக்குகளை செலுத்தும் வசதிக்கு இ.டி.பி.பி.எஸ். என்று பெயர்.

அப்படி எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் வாக்குகளை பதிவு செய்யும் போது தனது செல்போனை அவர் கொண்டு சென்றுள்ளார். மின்னணு மூலம் அனுப்பப்படும் வாக்குகளைப் பெற வாக்குப்பதிவு எந்திரத்தை ஆன் செய்ய ஓ.டி.பி. எண் அவசியம். மங்கேஷின் நண்பரான, தேர்தல் ஆணைய பணியில் இருந்த தினேஷ் குராவ்தான் செல்போனை இயக்கி ஓடிபி பெற்றுள்ளார்.மின்னணு தபால் மூலம் வாக்குகளை பெற்றபோது செல்போனை இயக்கி மோசடி நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு மங்கேஷம், தினேஷம் ஒத்துழைக்காவிடில் கைது செய்யப்படுவார்கள் என்று மும்பை போலீஸ் தெரிவித்துள்ளனர்.மங்கேஷிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி விவரம் கேட்டுள்ளது மும்பை போலீஸ். நெஸ்கோ வாக்குச்சாவடியில் இருந்த சிசிடிவி பதிவுகளையும் மும்பை வன்ராய் போலீஸ் ஆராய்ந்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்துக்கட்ட வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ. போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் தற்போது குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 131

0

0