பிரதமர் மோடி பற்றி அவதூறு கருத்து : இரு சமூக மக்களிடையே பிரச்சனை தூண்டும் விதமாக பதிவிட்ட குஜராத் எம்எல்ஏ கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2022, 7:01 pm

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நேற்றிரவு 11.30 மணியளவில் மேவானியை அவரது பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் வைத்து அசாம் போலீசார் கைது செய்து அகமதாபாத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்து அவர் இன்று காலை அசாம் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது அசாம் மாநிலம் கோக்ரஜாரை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் தேவ் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கோக்ரஜார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துபே பிரதீக் விஜய் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘குஜராத் மாநிலம் வடகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை நேற்றிரவு அசாம் போலீசார் பாலன்பூர் சர்க்யூட் ஹவுசில் கைது செய்தனர்’ என்று தெரிவித்தார்.

ஜிக்னேஷ் மீது, குற்றச் சதி, இரு சமூக மக்களிடையே பிரச்சனை தூண்டும் வகையில் செயல்பட்டது, உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைக்கும் செயலில் ஈடுபட்டது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?