தவறான தகவல்களை பரப்பிய 35 யூடியூப் சேனல்கள் முடக்கம்.. மத்திய அரசு அறிவிப்பு…

Author: kavin kumar
21 January 2022, 9:17 pm

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூ டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் மானுட வாழ்வியலை மாற்றியைப்பதில் சமூக ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அந்த சமூக ஊடகங்களின் மூலம் பலர் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்து, சாதனை படைத்து வருகின்றன. அதேநேரம் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்கள் தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்த, 35 பாகிஸ்தான் நாட்டு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால் இந்த சேனல்கள் முடக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய விவகாரங்களான காஷ்மீர் எல்லை விவகாரம், விவசாயிகள் போராட்டம் மற்றும் ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தவறான தகவல் பரப்பியதாக புகார்கள் எழுந்துள்ளன. அதன்படி ”தி பஞ்ச் லைன், இன்டர்நேஷனல் வெப் நியூஸ், கல்சா டிவி மற்றும் தி நேக்கட் ட்ரூத், 48 செய்திகள், பிக்சன்ஸ், ஹிஸ்டாரிக்கல் ஃபேக்ட்ஸ், பஞ்சாப் வைரல், நயா பாகிஸ்தான் குளோபல், கவர் ஸ்டோரி, கோ குளோபல்” உள்ளிட்ட பல சேனல்கள் முடக்கப்பட்டன. இதில் 20 யூடியூப் சேனக்களை 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்துள்ளதாகவும், இந்த சேனல்களின் வீடியோக்கள் 55 கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப் நிறுவனமே முன்வந்து நடவடிக்கை எடுத்துளதாக கூறினார். பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்த 35 யூடியூப் சேனல்கள் மட்டுமின்றி, 2 ட்விட்டர் கணக்குகள் , 2 இன்ஸ்டகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!