பொட்டு வைக்கக் கூடாதுனு சொல்லுவீங்களா? ஹிஜாப்க்கு தடை விதித்த வழக்கில் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 8:13 pm

சமீப காலங்களாக கல்வி நிலையங்களில் மத ரீதியிலான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள என்ஜி ஆச்சார்யா & டிகே மராத்தே தனியார் கல்லூரியில் கடந்த மே மாதம் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், மாணவ, மாணவிகள் மத அடையாளத்தை பிரதிபலிக்கும் ஆடைகளை அணியக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்கா உள்ளிட்டவற்றை அணியக்கூடாது என்பதுதான் இந்த உத்தரவின் பொருள்.

இப்படி இருக்கையில் இந்த உத்தரவு தங்களது மத சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாக கூறி, மாணவிகள் சிலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். வழக்கும் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தது.

அதில், “ஒழுங்கை நிலைநாட்டவே மதங்களை பிரதிபலிக்கும் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது எப்படி அடிப்படை உரிமைகளை பறிப்பதாக கருத முடியும்?” என்று கேள்வி எழுப்பி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் நம்பிக்கையை கைவிடாத மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிர்வாகத்தினரை நோக்கி நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

என்ன மாதிரியான விதி இது? மதத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று மாணவர்களுக்கு உத்தரவிட முடியுமா? அவர்களின் பெயர்களின் மதம் இல்லையா? அப்படியெனில் வெறும் நம்பர் வைத்து அவர்களை கூப்பிடுவீர்களா? பொட்டு வைக்காதே என்று கூற முடியுமா? கடந்த 2008 முதல் இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஆனால் திடீரென்று இந்த மே மாதம்தான் உங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தோன்றியதா?”என கேள்வி எழுப்பினர்.

கல்லூரி நிர்வாகம் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், 441 முஸ்லீம் மாணவர்கள் இந்த கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் எங்களின் உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

ஆனால், இவர்கள் சிலருக்கு மட்டும்தான் எங்கள் உத்தரவு பிரச்னையாக தெரிகிறது என்று வாதாடினார். உடேன குறிக்கிட்ட நீதிபதிகள், அவர்கள் என்ன அணிய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க கூடாதா? என்று கேள்வி எழுப்பி கல்லூரியின் உத்தரவுக்கு தடைவிதித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ