சர்ச்சைக்குரிய ஆவணப்படம் எதிரொலி.. பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு… தலைநகரில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan14 February 2023, 1:49 pm
பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தின் போது குஜராத்தின் முதலமைச்சராக, தற்போதைய பிரதமர் மோடி இருந்தார். இந்த நிலையில், தற்போது குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது.
இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியே, குஜராத் கலவரத்திற்கு பொறுப்பு என்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.
இதனால், இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பிபிசி நிறுவனம், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட நிலையில், டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.