லேப்டாப் சார்ஜ் வயரின் மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்து… வீட்டில் இருந்து பணி செய்து வந்த ஐடி பெண் ஊழியர் உடல்கருகி படுகாயம்…!!
Author: Babu Lakshmanan20 April 2022, 11:24 am
ஆந்திரா : லேப்டாப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து தனியார் ஐடி நிறுவன பெண் ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள மேக்கவாரி கிராமத்தை சேர்ந்தவர் சுமலதா. பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணி செய்து வரும் அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஒர்க் ப்ரம் ஹோம் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை தன்னுடைய லேப்டாப்பை சார்ஜ் போட்ட நிலையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று லேப்டாப் சார்ஜ் 10 சதவீதத்திற்கும் குறைந்து அதிலிருந்து ஹை வோல்டேஜ் மின்சாரம் சுமலதா மீது பாய்ந்தது. இதனால் சுமார் 40 சதவீதம் அளவிற்கு தீக்காயமடைந்த சுமலதாவை, பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமலதாவை அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறியுள்ளனர்.