இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு… அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை
Author: Babu Lakshmanan27 April 2022, 10:49 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பு 2 ஆயிரத்து 541 மற்றும் நேற்றைய பாதிப்பு 2 ஆயிரத்து 483ஐ விட அதிகமாகும்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேவேளையில், சமூக இடைவேளை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் மீண்டும் கடைபிடிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மதியம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவார். இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை குறித்து விளக்கம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.