‘உங்க அன்புக்காக மீண்டும் இங்கு வருவேன்’.. மேடையிலேயே விழுந்து SORRY சொன்ன பிரதமர் மோடி… வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan1 October 2022, 12:48 pm
ராஜஸ்தானில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்திற்கு தாமதமாக சென்றதற்காக பிரதமர் மோடி மேடையிலேயே மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தானின் சிரோஹியின் அபுரோடு பகுதியில் பாஜக பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியின் முடிவில் பிரதமர் மோடி கூட்டத்தில் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு, அந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றடைய 10 மணி ஆகி விட்டது.

இதனால், 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்ற விதி இருப்பதால், அதனைப் பின்பற்றி மேடையில் மைக் இல்லாமல் பிரதமர் மோடி பேசினார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ” இங்கு வர தாமதமாகி விட்டது. அதற்கு முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்ற விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதனால், மைக் இல்லாமல் சுருக்கமாக பேசி முடிக்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்காக மீண்டும் இங்கு வருவேன்,” எனப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, நீண்ட நேரம் காத்திருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் பேச முடியாமல் போனதற்கு, வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, மேடையிலேயே கீழே விழுந்து மன்னிப்பு கேட்டார். இது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலர் பாராட்டி வருகின்றனர்.