மொத்தம் 143… நாடாளுமன்றத்தில் இருந்து மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட் : வரலாற்று ‘சம்பவம்’!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 5:01 pm

மொத்தம் 143… நாடாளுமன்றத்தில் இருந்து மேலும் 2 எம்பிக்கள் சஸ்பெண்ட் : வரலாற்று ‘சம்பவம்’!!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வருகிற டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 19 நாட்களில் 15 அமர்வுகளாக இக்கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற 22ஆம் தேதி (நாளை மறுநாள்) நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடையவுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பு இந்த ஆண்டில் நடைபெறும் முழு அமர்வு இதுவாகும். ஆனால், இந்த கூட்டத்தொடரில் இருந்து இதுவரை 143 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து மத்திய பாஜக அரசு புதிய சாதனை படைத்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்த இருவர் புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவை நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கொத்துக்கொத்தாக கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், விவாதம் நடத்த வேண்டும் என கோரிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் 141 பேர் நேற்று வரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இருந்து இன்றும் இரண்டு எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள காங்கிரஸ் (மணி)யைச் சேர்ந்த தாமஸ் சாழிகடன் மற்றும் சிபிஐ(எம்) கட்சியை சேர்ந்த ஏ.எம்.அரிஃப் ஆகிய இருவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143ஆக உயர்ந்துள்ளது.

இன்றுடன் சேர்த்து மக்களவையில் 97 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் என இதுவரை மொத்தம் 143 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!