த்ரில்லான ஆட்டம்… கடைசி இரு பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரியும்.. 5வது முறையாக சாம்பியன்; ஜடேஜாவை தோளில் தூக்கி கொண்டாடிய தோனி..!!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 8:30 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குஜராத்தை தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சென்னை அணி.

அகமதாபாத்தில் கடந்த 28ம் தேதி ஐபிஎல் தொடருக்கான இறுதி ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக நேற்றைய தினம் நடந்த இறுதி போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா (54), கில் (39) என சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த சாய் சுதர்சனும் அதிரடி காட்டி 96 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் (21) அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இதனால், அந்த 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியின் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி சென்னை அணி பேட் செய்ய தொடங்கிய போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. எனவே, போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு, 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மழைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியதும் சென்னை அணியின் வீரர்கள் புயல் போல விளையாடினர். கெயிக்வாட் (26), கான்வே (47), ரகானே (27), ராயுடு (19) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

துபேவும், ஜடேஜாவும் வெற்றிக்காக போராடினர். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைபட்ட போது, மோகித் ஷர்மா முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார். இதன்மூலம், சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பிறகு தோனி ஆனந்த கண்ணீர் வடித்தார். அதோடு, ஜடேஜாவை தூக்கி தனது மகிழ்ச்சியை கொண்டாடினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!