சதத்தை தவறவிட்ட ஜடேஜா… இந்திய அணி 436 ரன்கள் குவிப்பு… தாக்கு பிடிக்குமா இங்கிலாந்து..?
Author: Babu Lakshmanan27 January 2024, 11:23 am
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 436 ரன்கள் எடுத்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர். பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். இதனால், அந்த அணி 246 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து, பேட் செய்த இந்திய அணி நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில், 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா (87) ரன்னுக்கும், அக்சர் படேல் 44 ரன்னுக்கும் அவுட்டாகினர். இதனால், இந்திய அணி 436 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 50 ரன்னுக்குள் முதல் விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.