காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. ஓசூரில் சோகம்!
Author: Hariharasudhan20 December 2024, 2:37 pm
ஓசூர் தேன்கனிக்கோட்டை அருகே யானைக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அடுத்த தாதகரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் திவ்ய ஸ்ரீ. 10 வயதான திவ்ய ஸ்ரீ, அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் இன்று காலை காலைக்கடனைக் கழிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் உள்ள கழிவறைக்குச் சென்று உள்ளார். அப்போது, கழிவறை அருகே இருந்த மின்கம்பியை திவ்ய ஸ்ரீ தொட்டு உள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே திவ்ய ஸ்ரீ துடிதுடித்து உயிரிழந்தார்.
பின்னர், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமல்லாமல், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!
இதில், சிறுமியின் தந்தை கிருஷ்ணன், காட்டு யானைகள் வராமல் இருப்பதற்காக மின்வேலி அமைத்ததாகவும், அதிலே மின் கசிவு ஏற்பட்டு அவரது மகள் உயிரிழந்ததும் தெரிய வந்து உள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.