மூட்டை தூக்கும் தொழிலாளியிடம் ₹3.82 லட்சம் மோசடி.. பழைய நாணயங்களை வைத்து பலே மோசடி நடத்திய கும்பல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 செப்டம்பர் 2024, 2:19 மணி
Fraud
Quick Share

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள மண்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (43). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவரது செல்போன் பேஸ்புக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு விளம்பரம் வந்துள்ளது.

அதில் பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால், லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

இதனை பார்த்த ராஜன், அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் , ராஜனிடம் மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் படம் பொறிக்கப்பட்டு வெளியான 5 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் இருக் கிறதா? எனக்கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம், அத்தகைய நாணயங்களாக ஐந்து ரூபாய் நாணயங்கள் 7ம், 2 ரூபாய் நாணயங்கள் இரண்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: முறையாக அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கும் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

அப்போது அந்த நாணயங்களை படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க மர்ம நபர் கூறியுள்ளார். அதன்பேரில், தன்னிடம் இருக்கும் பழைய நாணயங்களை படம் எடுத்து, அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் ராஜனை இரண்டு பெண்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், இந்த நாணயங்களை 36 லட்சத்திற்கு விற் பனை செய்யலாம். அந்த அளவிற்கு இது மதிப்புள்ளது. அதனால் நாங்களே, ரூபாய் 36 லட்சத்திற்கு வாங்கிக் கொள்கிறோம், எனக்கூறியுள்ளனர்.

இவை அனைத்தும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் என்பதால் பதிவு கட்டணம், பரிசோதனை கட்டணம், அரசுக்கான வரி என பல வகையில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அந்த பணத்தை தந்தால், ரூபாய் 36 லட்சத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் என்று ராஜனிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய ராஜன், தனது வங்கிக்கணக்கில் இருந்து சிறிது சிறிதாக 22 தவணைகளில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 600ஐ அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள், இன்னும் கூடுதலாக பணம் வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த ராஜன், தனக்கு 36 லட்சம் ரூபாய் வேண்டாம். தான் செலுத்திய ₹3.82 லட்சத்தை மட்டும் திரும்ப தாருங்கள் எனக்கூறியுள்ளார்.

அத்துடன் அந்த இணைப்பை துண்டித்துக் கொண்டவர்கள், மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்து இம் மோசடி பற்றி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில், ராஜன் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பழைய நாணயத்தை அதிக விலைக்கு வாங்குவதாக கூறி 3.82 லட்சம் ரூபாய் மோசடி செய்தது சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த திலீப் (29), அவரது மனைவியான சேலம் ஜெவேரியாபானு(26) , அஞ்செட்டியை சேர்ந்த செர்ஷாகான் (35), ஓமலூர் கண்ணணூரை சேர்ந்த முகமது இம்ரான் (24), அவரது மனைவி
அர்ஷியாபானு(23) ஆகியோர் எனத்தெரியவந்தது.

₹3.82 lakh scam from a bag lifter

அந்த 5 பேரையும் நேற்று மாலை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பழைய நாணயத்தை அதிக விலைக்கு வாங்குவதாக கூறி ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட திலீப், ஜெவேரியாபானு, செர்ஷாகான், முகமது இம்ரான், அர்ஷியாபானு ஆகிய 5 பேரும் அரியானா மாநிலத்தில் சைபர் மோசடி செய்வது குறித்து அங்கு செயல்பட்டு வரும் சைபர் குற்ற பயிற்சி மையங்களில் சில மாதங்களாக பயிற்சி பெற்றுவிட்டு வந்ததும் , அதன் மூலம் இங்கு பேஸ்புக்கில் விளம்பரத்தை பதிவிட்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரும் வேறு யாரிடமாவது இதேபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என விசாரித்து வருகின்றனர். இந்த நூதன மோசடி சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 176

    0

    0